சிறுவன் கடத்தி கொலை: வாயில் மதுவை ஊற்றி மயக்கி கொலை செய்தது அம்பலம்

கீழ்பள்ளம் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்தான்.2 பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர்.
ரோகித்
ரோகித்
Published on

தளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 40), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இளைய மகன் ரோகித் (13), மாவனட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், அவரை காரில் கடத்தி சென்றனர்.

இதையடுத்து, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்தான்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரது சடலத்தை எடுத்துக்கொண்டு அஞ்செட்டி பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கொலை செய்த வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி, சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, சம்பவ இடம் சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டனர்.

இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி சிறுவனை கொலை செய்த அதே ஊரை சேர்ந்த புட்டண்ணன் என்பவரின் மகன் மாதேவன் (21), மாரப்பன் என்பவரின் மகன் மாதேவா (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புட்டண்ணன் மகன் மாதேவன், 20 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் பகலில் காதலியுடன் அங்குள்ள ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார்.

சிறுவன் ரோகித், அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளான். இதை ரோகித் மற்றவர்களிடம் சொல்லி விடுவானோ என நினைத்த மாதேவன், தனது நண்பனான மாதேவாவிடம் கூறினார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காரில் அவனை ஏற்றிக்கொண்டு சென்றனர். அந்த நேரம் அவர்கள் வாங்கி வைத்திருந்த பீரை சிறுவனின் வாயில் ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்துள்ளனர்.

இதன்பிறகு சிறுவனை தேன்கனிக்கோட்டை சாலையில் திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் 50 அடி ஆழ பள்ளத்தில் மேலே இருந்து கீழே தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

தொடர்ந்து மாதேவனுடன் உல்லாசமாக இருந்த அந்த பெண் மற்றும் மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com