சட்டசபை தேர்தல் - அடுத்த மாதம் 3 முறை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ.க. தீவிரமாகி வருகிறது. மதுரையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது.
சட்டசபை தேர்தல் - அடுத்த மாதம் 3 முறை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
Published on

சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ.க. தீவிரமாகி வருகிறது. இதற்காக தேர்தல் பிரசார குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது. மேலும் நிர்வாகிகளுக்கு தொகுதி பொறுப்புகளையும் வழங்கியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது.

மார்ச் 1-ந்தேதி நடக்கும் இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

அதைத்தொடர்ந்து வேலூர், திருச்சி, தஞ்சையில் பிரசாரம் செய்யவும் பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 7-ந்தேதி வேலூரிலும், 11-ந்தேதி திருச்சியிலும் நடக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளையும் பா.ஜ.க. நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தனித்தனி குழு அமைக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 3 முறை தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள இருப்பது அ.தி.மு.க.-பா.ஜ.க. தொண்டர்களை உற்சாகமூட்டி உள்ளது.

தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் மார்ச் மாதத்தில் தொடர் பிரசாரங்களை முன்னெடுக்க இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com