அரிட்டாபட்டியை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அரிட்டாபட்டியை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
Published on

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து, டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் ரத்து குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து வரவேற்கத்தக்கது: பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலூர் பகுதி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

வேளாண் நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.

அந்த அடிப்படையில் தான் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தத் திட்டத்திற்கு தொடக்கத்தில் ஆதரவாக இருந்த திமுக அரசு, மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நான் அம்பலப் படுத்தினேன். கடந்த திசம்பர் 26-ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் கலந்து கொண்டேன்.

அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன.இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன.

தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. அரிட்டாப்பட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருப்பது சரியான நடவடிக்கை.

அதேநேரத்தில் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் இத்தகைய திட்டங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்தப் பகுதியை மேலூர் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com