அன்புமணி ராமதாசின் உரிமை மீட்பு பயணத்திற்கு தடை: அனுமதி கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்..!

அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை.அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாசின் உரிமை மீட்பு பயணத்திற்கு தடை: அனுமதி கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்..!
Published on

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கை பரபரப்பாக்கி வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்குவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அதன்படி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். 100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பா.ம.க. நிர்வாகிகளையும், பொதுமக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்தப் பயணத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் தனது பயணத்திற்கு டி.ஜி.பி. தடைவிதித்த நிலையில், அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அன்புமணி ராமதாஸ் நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com