சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Published on

சென்னை:

வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

'வேளாண் வணிகத் திருவிழா-2025" நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி அன்று தொடங்கி வைத்து, உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

பங்கேற்கும் துறைகள் மற்றும் நிறுவனங்கள் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்க ரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் மற்றும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகம், பனை, தென்னை, ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், உழவர் நல சேவை மையங்கள், நகர்ப்புரத் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நீர்ஊடகத் தோட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை, பாரம்பரிய காய்கறிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள். தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, எண்ணெய் செக்கு எந்திரம், பருப்பு உடைக்கும் எந்திரம் போன்ற மதிப்புக் கூட்டும் எந்திரங்கள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான விவரங்கள் போன்ற அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும்.

இதுதவிர முன்னணி வேளாண் தொழில் முனைவோருடன் கலந்துரையாடலும் நடைபெறும். இக்கருத்தரங்குகளில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு அருகாமையிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com