8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 ஆசிரியர்கள் கைது- உறவினர்கள் போராட்டம்

3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.
8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 ஆசிரியர்கள் கைது- உறவினர்கள் போராட்டம்
Published on

கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.

உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.

இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம். 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை காண்பிக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவியின் உறவினர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com