

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் விநாயக் பிரஜாபதி.
தனது பூர்வீக சொத்தை விற்று அந்த பணத்தில் வீட்டிலேயே ஹோம் ஸ்டுடியோ அமைத்த விநாயக் பிரஜாபதி, யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
ஆனால், யூடியூபில் தனக்குக் கணிசமான பின்தொடர்பவர்களோ, சேனலுக்கு ஆதரவோ கிடைக்காததால் கடந்த சில நாட்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், ஸ்டுடியோவிற்கு உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்ட அவர் உபகாரணங்களுக்கு தீ வைத்துள்ளார்.
வீடு முழுவதும் புகை சூழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறினர். அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ஸ்டுடியோவில் இருந்த விலை உயர்ந்த கம்ப்யூட்டர்கள், கேமராக்கள், சவுண்ட் சிஸ்டம் மற்றும் மின் விளக்குகள் என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.