"திருமண வயதை எட்டாவிடினும் லிவ்-இன் உறவில் இருக்கலாம்" - ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்தியச் சட்டத்தின் கீழ் வயது வந்தவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.இந்திய சட்டத்தின்கீழ் லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமோ, குற்றமோ அல்ல
"திருமண வயதை எட்டாவிடினும் லிவ்-இன் உறவில் இருக்கலாம்" - ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!
Published on

சட்டப்பூர்வ திருமண வயதை எட்டவில்லை என்றாலும், வயதுவந்த இருவருக்கும் முழு சம்மதம் எனில், அவர்கள் லிவ்-இன் உறவில் நுழையலாம் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் அவரது 19 வயது ஆண் நண்பர் தாக்கல் செய்த ரிட்மனுமீதான விசாரணையின் போது இந்த கருத்தை தனி நீதிபதி தெரிவித்துள்ளார். இருவரும் விருப்பத்தோடு உடலுறவு வைத்துக்கொண்ட நிலையில், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஊள்ளூர் காவல்துறையை அணுகியபோது, அவர்கள் இளைஞர் இன்னும் 21 வயதை எட்டவில்லை எனக்கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இருவரும் காவல்துறை தங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தை நாடினர். அப்போது இளைஞர் சட்டப்பூர்வ திருமண வயதை எட்டாததால் இருவரும் லிவ்-இன் உறவில் ஒன்றாக வாழ அனுமதிக்கக்கூடாது என்று அரசு வாதிட்டது. அரசின் நிலைப்பாட்டை நிராகரித்த நீதிபதி,

"18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்தியச் சட்டத்தின் கீழ் வயது வந்தவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். வயதுவந்தோர் என்பது, இணைந்து வாழும் முடிவு உட்பட தனிப்பட்ட தேர்வுகளைச் செய்யும் உரிமையைக் கொண்டுள்ளது. பிரிவு 21 இன் கீழ் சட்டத்தால் சட்ட நடைமுறைகளை தவிர ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்க்கையில் தலையிடுதல் கூடாது. மனுதாரர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடியாததால் மட்டுமே, அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியாது. மேலும் இந்திய சட்டத்தின்கீழ் லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமோ, குற்றமோ அல்ல." என தெரிவித்தார். 

தொடர்ந்து மனுவில் இருவரும் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து, சட்டப்படி அவர்களின் கோரிக்கையை மதிப்பிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com