கல்வியே பிரதானம்... குழந்தை பிறந்த 2 நாட்களிலேயே பொதுத்தேர்வு எழுதிய பெண்

தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார். வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார்.
கல்வியே பிரதானம்... குழந்தை பிறந்த 2 நாட்களிலேயே பொதுத்தேர்வு எழுதிய பெண்
Published on

மும்பை:

ஆண் கல்வியறிவு பெற்றால் ஒரு தனிநபர் பயன் பெறுவார், ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒரு தலைமுறையே பயன்பெறும் என்பது பெண் கல்வியின் மகத்துவத்தை போற்றும் பொன்மொழியாகும்.

அந்தவகையில் கல்வியை பிரதானமாக கருதிய பெண் ஒருவர், தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மற்ற பெண்களுக்கு ஆகச்சிறந்த முன்உதாரணமாக திகழ்ந்துள்ளார்.

மராட்டிய மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(வயது21). வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார். கல்வியின் முக்கியத் துவத்தை அறிந்து பின்னர் கல்வியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் மணமாலை சூடினார். திருமணத்துக்கு பிறகும் கல்வியை கைவிட அவரது மனது சம்மதிக்கவில்லை. அங்குள்ள ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இல்லற வாழ்க்கை காரணமாக 10 நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு சமயத்தில் குழந்தை பிறந்தாலும், அது பரீட்சை எழுத அவருக்கு தடையாக அமையவில்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தார்.

தனக்கு குழந்தை பிறந்த 2 நாட்களில், அதாவது கடந்த 10-ந்தேதி நடந்த ஆங்கில தேர்வை அவர் தனது சகோதரியுடன் வந்து எழுதி அனைவரை யும் வியக்க வைத்தார். நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.

பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேவையான வசதிகளை தேர்வு மைய அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கான தொட்டில் உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியை தனது இரு கண்களாக கருதிய பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் மராட்டியத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com