கணவனை காப்பாற்ற கடன் வாங்கி ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்த மனைவி.. கடைசியில் 7 பேர் உயிரிழந்த சோகம்

உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.
கணவனை காப்பாற்ற கடன் வாங்கி ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்த மனைவி.. கடைசியில் 7 பேர் உயிரிழந்த சோகம்
Published on

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் நேற்று இரவு, ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் லாதேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் (41). இவர் ஒரு சிறிய உணவகம் நடத்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

கடந்த வாரம் இவரது உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.

உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், அவரை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு மாற்றக் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

பணக்கஷ்டத்தில் இருந்தபோதிலும், எப்படியாவது அவரைப் பிழைக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி, இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை சஞ்சய்யின் மனைவி ஏற்பாடு செய்துள்ளார்.

திங்கள்கிழமை மாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் சஞ்சய்யுடன் அவரது மனைவி அர்ச்சனா தேவி மற்றும் உறவினர் துரு குமார் ஆகியோரும் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக சத்ரா மாவட்டத்தின் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் நோயாளி சஞ்சய், அவரது மனைவி, உறவினர், மருத்துவர், செவிலியர், 2 விமானிகள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சஞ்சய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவரது மனைவியும் பிறரும் அவருடன் சேர்த்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com