அகமதாபாத் விமான விபத்து விமானியின் திட்டமிட்ட செயலா? - மத்திய அரசு பதில்

அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது.இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை .
அகமதாபாத் விமான விபத்து விமானியின் திட்டமிட்ட செயலா? -  மத்திய அரசு பதில்
Published on

கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை மாதம் வெளியான ஆரம்பகட்ட அறிக்கையில் எரிபொருள் ஸ்விட்சை திடீரென அணைந்ததால் 2 என்ஜின்களும் செயலிழந்தது விபத்து காரணம் என்று தெரிய வந்தது.

விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை வேண்டுமென்றே அணைத்தார் என அமெரிக்க ஊடகங்கள் கூறி வந்தன.

இதற்கிடையே, அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' அண்மையில் வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த அறிக்கையில், "விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்.

வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவந்துள்ளது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்தது.

போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஊகங்களே என்றும் மத்திய விமான போக்குவரத்துக்கு துறையின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) விளக்கமளித்துள்ளது.

புலனாய்வு இன்னும் நடைபெற்று வருகிறது. இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்று AAIB தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com