பம்பை சாலையில் வேரோடு சாய்ந்த மரம்- ஜனாதிபதி புறப்படுவதில் தாமதம்

பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்.ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பம்பை சாலையில் வேரோடு சாய்ந்த மரம்- ஜனாதிபதி புறப்படுவதில் தாமதம்
Published on

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். முன்னதாக, சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட இருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com