

திருப்பூர் பல்லடத்தில் மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஏற்பாட்டு பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
'எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாகவும், கடன் மாநிலமாகவும் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் அயராத உழைப்பால் இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது' என்று இபிஎஸ், அன்புமணி போன்ற எதிர்க்கட்சிகளின் தமிழ்நாடு கடன் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு, உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன் அதிகமாக உள்ளது என காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
'இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் நிலுவைக்கடன் உள்ளது. 2010-ல், உத்தரப் பிரதேசத்தின் கடன் தொகை தமிழ்நாட்டின் கடனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. இப்போது, தமிழ்நாட்டின் கடன் தொகை உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.
வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கோவிட்-க்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.