எஸ்.வி.சேகர் சரணடைய அவகாசம் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு

சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க தயார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். எதிர்மனுதாரராக புகார் அளித்த பெண் பத்திரிகையாளரையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
எஸ்.வி.சேகர் சரணடைய அவகாசம் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து எஸ்.வி. சேகர் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க தயார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

இதையடுத்து எஸ்.வி.சேகரின் முறையீட்டை ஏற்று அவர் சரண் அடைவதற்கு அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தனது தரப்பு விளக்கமளித்து மன்னிப்பு கோர தயார் என எஸ்.வி.சேகர் கூறி உள்ளதால் சரணடைவதற்கான காலத்தை நீட்டுகிறோம் என்று தெரிவித்த நீதிபதிகள், எஸ்.வி.சேகர் சரணடைவதற்கான காலஅவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

மேலும் எதிர்மனுதாரராக புகார் அளித்த பெண் பத்திரிகையாளரையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com