

2020 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது. இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் விஸ்மயாவை மோசமாக துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தனர். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, வரதட்சணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து கிரண்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், கிரண்குமாருக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.