சபரிமலை கோவில் வருமானம் ரூ.297 கோடி- கடந்த ஆண்டை விட ரூ.82 கோடி அதிகம்

நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். அரவணை விற்பனை மூலம் ரூ.124 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 950-ம், காணிக்கை மூலம் ரூ.80 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 567-ம் கிடைத்துள்ளது.
சபரிமலை கோவில் வருமானம் ரூ.297 கோடி- கடந்த ஆண்டை விட ரூ.82 கோடி அதிகம்
Published on

சபரிமலை:

சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு 2024-2025 மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை-1) வழக்கமான பூஜை நடந்து வந்தது. 41 நாட்கள் நடைபெற்று வந்த பூஜையின் சிகரமாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 31-ந் தேதி முதல் வழக்கமான பூஜை நடந்து வருகிறது.

நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். மண்டல சீசனில் 41 நாட்களில் மொத்த வருமானம் ரூ.297 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 679 ஆகும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், மண்டல சீசனில் கடந்த ஆண்டை விட ரூ.82 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 781 கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ரூ.124 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 950-ம், காணிக்கை மூலம் ரூ.80 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 567-ம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட காணிக்கை மூலம் ரூ.13 கோடியே 28 லட்சத்து 45 ஆயிரத்து 705 கூடுதலாக வந்துள்ளது.

அதே போல் அரவணை விற்பனை மூலம் கடந்த ஆண்டை விட ரூ.22 கோடியே 6 லட்சத்து 59 ஆயிரத்து 540 கூடுதலாக கிடைத்துள்ளது.

மகர விளக்கை முன்னிட்டு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்த போதிலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com