நாட்டை அவமதிக்கும் ராகுல் காந்தியை கட்டுப்படுத்துங்கள்: காங்கிரஸ்க்கு ம.பி. முதல்வர் வலியுறுத்தல்

ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்திய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.நாட்டின் மற்றும் அதன் குடிமக்களின் நற்பெயரை கெடுக்கவோ அல்லது அவதூறு செய்யவோ கூடாது.
நாட்டை அவமதிக்கும் ராகுல் காந்தியை கட்டுப்படுத்துங்கள்: காங்கிரஸ்க்கு ம.பி. முதல்வர் வலியுறுத்தல்
Published on

அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மகாராஷ்டிரா தேர்தலில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர். மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது. ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.

நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை. தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் "ராகுல் காந்தி நாட்டை அவமதித்து விட்டார். காங்கிரஸ் கட்சி அவரை கட்டுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்திய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார். அவர் இதை செய்திருக்கக் கூடாது என தெரிவித்தேன். ஆனால் அது அவரது (ராகுல் காந்தியின்) விருப்பத்தைப் பொறுத்தது. அது ஒரு நபரின் குணமாக மாறும். நாம், நாட்டின் மற்றும் அதன் குடிமக்களின் நற்பெயரை கெடுக்கவோ அல்லது அவதூறு செய்யவோ கூடாது.

மற்ற நாடுகளில் உள்ள தலைவர்கள் இதுபோன்ற சூழ்நிலையை தங்களுடைய நாட்டிற்கு எதிராக அந்நிய மண்ணில் ஏற்படுத்தமாட்டார்கள். இது காங்கிரஸ் கட்சியின் மனநிலை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களுடைய தலைவரை கட்டுப்படுத்துவது அவசியமானது" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com