பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு

பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு
Published on

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.

இதனையடுத்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, "இந்திய - பாகிஸ்தான் சண்டையில் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார். இந்த உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com