

புதுடெல்லி:
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்னத்தை பிரதமர் மோடி இன்று இரவு சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று மாலை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தேன். இந்தியா-சிங்கப்பூர் விரிவான மூலோபாய கூட்டுறவின் முழு வீச்சு குறித்து விவாதித்தோம். டிஜிட்டல் மயமாக்கல், திறன், இணைப்பு மற்றும் பல எதிர்காலத் துறைகளைப் பற்றி பேசினோம். தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் கலாசாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.