விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது.விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.

முதற்கட்ட பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு முடிவுக்கு வந்தநிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்தஆண்டு (2024) ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கப்பட்டு சோதனைஓட்டம் நடத்தப்பட்டது. முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு கட்ட பணிகள் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது. மேலும் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதியாகும். இதனால் பல்வேறு நாடுகளுக்கான பயண தூரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து பெரிதளவில் குறைவாகவே இருக்கும்.

விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் ஆண்டுக்கு 10லட்சம் கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. மூன்று கட்ட பணிகளும் முடிவடையும் பட்சத்தில் 45லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து பிரதமர் மோடி ராஜ்பவனுக்கு சென்று இரவில் தங்கினார்.

இந்தநிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்பு துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்பு விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.

இந்த விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய மந்திரிகள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள துறைமுக மந்திரி வி.என். வாசவன், மாநில மந்திரிகள் சிவன்குட்டி, அனில், சாஜி செரியன், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சசிதரூர் எம்.பி., அதானி குழும தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், துறைமுக நிர்வாக இயக்குனர் கரண் அதானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com