#Parliament பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது.கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
#Parliament பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந் தேதியுடன் முதல்கட்ட அமா்வு முடிவு அடைந்தது.

முதல்கட்ட அமர்வின்போது ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பாராளுமன்ற மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளியை தொடங்கின.

முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகள் மோதல் போக்கை கடைபிடித்தன.

கடந்த 3-ந்தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது.

பாராளுமன்ற கூட்டத்தின் முதல் நாளிலேயே மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்க தீர்மான விவாதம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்களான முகமது ஜாவத், கே.சுரேஷ், மல்லு ரவி ஆகியோர் முன்மொழிகிறார்கள். இந்த தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் போது அனைத்து உறுப்பினரும் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு கொறடா மூலம் உத்தரவை பிறப்பித்துள்ளன.

அரசமைப்பு சட்டத்தின் 94சி பிரிவின் கீழ் பெரும்பான்மையான வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முடியும். தற்போது பா.ஜ.க. கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர்.

கடந்த காலங்களில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர்களாக இருந்த ஜி.வி. மாவலங்கர் (1954), ஹூக்கம் சிங் (1966), பல்ராம் ஜாக்கர் (1987) ஆகியோர் இதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர். ஆனால் எந்த தீர்மானமும் வெற்றி பெறவில்லை.

தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஓம்பிர்லாவுக்கு எதிரான தீர்மானமும் தோல்வியை சந்திக்கும்.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், ரஷிய கச்சா எண்ணெய் விவாதத்தில் அமெரிக்காவின் மிரட்டல் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் பிரச்சனையை கிளப்புவார்கள். மத்திய அரசு இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com