

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
திருமணம், விவகாரத்து உள்ளிட்டவை அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதனபடி பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்தல் போன்றவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் இது தொடர்பாக பதிவு செய்யவில்லை என்றால் 6 மாத சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று பொது சிவில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.
இந்நிலையில், உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தின்படி ஒருவரின் லிவ்-இன் உறவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை இது தொடர்பாக 5 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றும் 1 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற 4 விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.