

பஹல்காம் தாக்குலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்விக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
பல விசயங்களுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டியுள்ளது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சில நாட்களுக்கு முன்னதாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி எனக் கூறியிருந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்றால், அதற்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் சுட்டுக்கொலை செய்துள்ளோம். அதேவேளையில், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்விக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் இது தொடர்பாக கேள்வி கேட்பார்கள்.
370 சட்டப்பிரிவை நீக்கினால், பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று 2019ஆம் ஆண்டு சொன்னவர்களிடம், இன்று 6 வருடங்களுக்குப் பிறகு பயங்கரவாதிகள் இன்னும் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்பதை கேட்க வேண்டியிருக்கும். ஆகவே, அப்போது கூறப்பட்டதற்கும், தற்போதைய நிலைமைக்கும் வித்தியாசம் உள்ளது.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.