

மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மனோஜ் ஜாரங்கி ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மும்பை நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிந்தன. ரெயில் நிலையங்கள் உட்பட அங்கங்கே வன்முறை மற்றும் கலவரமான சூழலும் நிலவியது.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
நேற்று (திங்கள்கிழமை) நடந்த விசாரணையில், போராட்டங்கள் அமைதியாக நடத்தப்படவில்லை என்றும், அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர குகே மற்றும் கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, "
போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசாத் மைதானத்தில் அல்லாமல் ஏன் வெளியே சுற்றுகிறார்கள். ஐகோர்ட்டு கட்டிடம் கூட போராட்டக்காரர்களால் சூழப்பட்டுள்ளது.
'நீதிபதிகள், வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் மறிக்கப்பட்டது. நீதிபதிகளின் கார் மறிக்கப்பட்டு விசாரணைக்கு வருவது தடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த நகரரும் ஸ்தம்பித்துள்ளது.
நிலைமையை உடனடியாக சரிசெய்ய ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.
செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் அனைத்து தெருக்களும் காலி செய்யப்பட வேண்டும். அனைத்து சாலைகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டது.