சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜவகர்லால் நேரு செய்த மிகப்பெரிய வரலாற்றுப் பிழை - அசாம் முதல்வர்

80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜவகர்லால் நேரு செய்த மிகப்பெரிய வரலாற்றுப் பிழை - அசாம் முதல்வர்
Published on

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவதாக தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விசா ரத்து உள்ளிட்டவற்றுடன் இந்திய அரசு எடுத்த மற்றொரு முக்கிய முடிவு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகும். இதனால் பாகிஸ்தானின் நீராதாரம் பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில் "1960 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மூலோபாய தவறுகளில் ஒன்றாகும்" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேல் நதிக்கரைப் பகுதியில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இருந்தபோதிலும், அப்போதைய அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் கடுமையான அழுத்தத்தின் கீழ், நேரு, சிந்து நதிப் படுகையின் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்.

வலிமைமிக்க சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் பாகிஸ்தானுக்கு வழங்கினார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.

பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 135 மில்லியன் MAF தண்ணீர் கிடைக்கிறது, அதே நேரத்தில் இந்தியாவிடம் 33 MAF மட்டுமே மீதமுள்ளது.

மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் உரிமைகள் சிறு நீர்ப்பாசனம் மற்றும் ஆற்றின் வழியாக ஓடும் நீர் மின் திட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, அவை எந்த அர்த்தமுள்ள சேமிப்பும் இல்லாமல் உள்ளன, இதனால் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நீர் தேவைகள் நிரந்தரமாகச் சமரசம் செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தம் இப்போது நிறுத்தப்பட்டதற்கு ஹிமாந்த பிஸ்வா சர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

"சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. அங்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயம் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது.

மோடியின் நடவடிக்கைகள், மன்னிப்பு கேட்டு நிற்காமல் தனது நலன்களைப் பாதுகாக்கத் தீர்மானித்த ஒரு புதிய, உறுதியான இந்தியாவின் எழுச்சியைக் குறிக்கின்றன" என்றும் அவர் மேலும் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com