

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய தாக்குதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து உறவுகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. நாளை நாடு தழுவிய போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் மக்களவை எம்.பி.யும், ஏ.ஐ.எம.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அசாததுதீன் ஓவைசி கூறியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கோழைத்தனமான தாக்குதல். நாம் அதை எவ்வளவு அதிகமாகக் கண்டிக்கிறோமோ, அது அவ்வளவு குறைவானதாகவே இருக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றதை நாம் பார்த்திருக்கிறோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, ஆண்களை மட்டும் குறிவைத்து அவர்களின் மதம் என்ன? என்று கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டது மனிதாபிமானமற்றது. கல்மா ஓதத்தெரியாதவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமாகும்.
இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் சென்றுள்ளனர். இதற்கு நமது அரசாங்கம் ஒரு பயனுள்ள பதிலை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்திலும் நாங்கள் அதையே கூறியுள்ளோம்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ஓவைசி தெரிவித்துள்ளார்.