'சோனம் வாங்சுக்கை காந்தியுடன் ஒப்பிட வேண்டாம்' - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறதுஇந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம்.
'சோனம் வாங்சுக்கை காந்தியுடன் ஒப்பிட வேண்டாம்' - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
Published on

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். காவலில் இருக்கும் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாங்சுக்கின் உடல்நிலை அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும், உடல்நலக் காரணங்களுக்காக அவரை விடுவிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும் "உடல்நலக் காரணங்களுக்காக வாங்சுக்கை விடுவிப்பது என்பது ஒரு 'சமூக ஊடக நாடகம்' என்று தெரிவித்தார். 

அதற்கு, பதிலளித்த நீதிமன்றம், 'ஏன் ஒரு சிறிய விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்த முயல்கிறீர்கள்? நாங்கள் கேள்விகள் கேட்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா?' எனக் கேட்டது. இதற்கு மேத்தா, 'நான் அதைச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்.

மேலும் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடாதீர்கள் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விசாரணையின்போது சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறது என்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி. வராலே அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது. மேலும் வாங்சுக்கின் அறிக்கைகள் மற்றும் போராட்ட முறைகள் குறித்து அரசு முன்வைத்த வாதங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, மகாத்மா காந்தியின் கடைசி உண்ணாவிரத உரையை மேற்கோள் காட்டியது. வாங்சுக் தனது உரையில் "காந்திய வழியில் இருந்து மக்கள் விலகிச் செல்வது கவலை அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதற்கு, முற்றிலும் இந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம். அவரை தேசப்பிதாவுடன் ஒப்பிட வேண்டாம்'. 'இந்த நீதிமன்றம் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டது என்பது நாளைய தலைப்புச் செய்தியாக மாறிவிட வேண்டாம்' என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com