டெல்லி கார் வெடிப்பு - சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு - சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு
Published on

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கடுமையான சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேற்றிரவு தடயவியல் துணை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் இன்று மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com