

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் பயணித்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல்களின்படி, CRPF படையின் 187வது பட்டாலியனின் பேருந்து, இன்று காலை சுமார் 10:30 மணியளவில் கட்வாவிலிருந்து உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த் கர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது 200 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
பேருந்தில் 18 வீரர்கள் இருந்தனர். இந்த விபத்தில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 15 வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.