பீகார் முதல்கட்ட தேர்தல்: 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டிய வாக்குப்பதிவு

வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகின.
பீகார் முதல்கட்ட தேர்தல்: 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டிய வாக்குப்பதிவு
Published on

234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நேற்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

121 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளன.

அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

இந்நிலையில், பீகார் முதல்கட்ட தேர்தலில் பதிவான மொத்த வாக்குபதிவு சதவீதம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com