பீகார் தேர்தல்: தந்தை லாலு பிரசாத் கோட்டையில் தேஜஸ்வி யாதவ் 3வது முறையாக வெற்றி

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார்.2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பீகார் தேர்தல்: தந்தை லாலு பிரசாத் கோட்டையில் தேஜஸ்வி யாதவ் 3வது முறையாக வெற்றி
Published on

பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

இதற்கிடையே ஆர்ஜேடியின் கோட்டையாகக் கருதப்படும் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் இறுதிக் கட்டம் வரை நடந்த பரபரப்பான போட்டியில், ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சுமார் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார். கடைசி கட்டம் வரை பரபரப்பான போட்டியைக் கண்ட ரகோபூர், இறுதியாக தேஜஸ்வி யாதவை வெற்றியாளராக முடிசூட்டியது.

முன்னதாக, இந்த சட்டமன்றத் தொகுதியை அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாய் ராப்ரி தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

அதன் பிறகு, தேஜஸ்வி யாதவ் 2015 முதல் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால், இந்த முறை பாஜக தனது வேட்பாளராக சதீஷ் குமார் யாதவை நிறுத்தியது. முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜேடியு வேட்பாளராகப் போட்டியிட்ட சதீஷ் குமார் யாதவ், ராப்ரி தேவியை தோற்கடித்திருந்தார்.        

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com