கேரளாவில் 5 மாதத்தில் 1.65 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிப்பு: ரேபிஸ் தாக்கி 17 பேர் உயிரிழப்பு

எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 9,169 நாய்கடி வழக்குகள் பதிவாகி உள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே தெருநாய் கடி பாதிப்பு அதிகரிக்க காரணமாகும்.
கேரளாவில் 5 மாதத்தில் 1.65 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிப்பு: ரேபிஸ் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
Published on

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கிறது. தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், நாய் கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கேரளாவில் கடந்த 5 மாதங்களில் 1,65,136 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதும், 17 பேர் ரேபிஸ் நோய் தாக்கி இறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் ராஜூ என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெற்ற தகவல்களில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 9,169 நாய்கடி வழக்குகள் பதிவாகி உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான நாய்கடி சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது.

கடந்த 5 மாதங்களில் நாய்கடி இறப்புகளை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆலப்புழாவில் 4, கொல்லம் மற்றும் மலப்புரத்தில் தலா 3, பாலக்காடு மற்றும் பத்தினம்திட்டாவில் தலா 2, எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் தலா ஒன்று என மொத்தம் 17 பதிவாகி உள்ளது.

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே தெருநாய் கடி பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. கொச்சி நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க தெருநாய்களுக்கு பொதுமக்கள் உணவு அளிப்பது முக்கியமான காரணமாக இருக்கிறது என்று மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நபர்கள் உள்ளூர் ஓட்டல்கள மற்றும் இறைச்சி கூடங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி கழிவுகளை தெர வில் உள்ள நாய்களுக்கு உணவளிப்பதால் நிலைமை மேலும் மோசமடைவதா வும் அவர் கூறினார்.

தெருநாய்கள் மூலமாக மக்களுக்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், தெரு நாய்கள் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு விரைவில் கேரளா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com