கற்றாழை தரும் கலக்கல் அழகு...

இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.பேஸ் பேக், சரும எரிச்சலைப் போக்கி, சருமத்துக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.
கற்றாழை தரும் கலக்கல் அழகு...
Published on

தற்போதைய குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், சருமத்தில் ஈரப்பசை வேகமாக நீங்கி, வறட்சி ஏற்படுகிறது. இந்நாட்களில் உண்டாகும் பொதுவான பிரச்சனை தான் இது.

இந்த சரும வறட்சியைப் போக்க தினம் தவறாமல் மாய்சரைசரை பயன்படுத்த வேண்டும். அதேசமயம் முகத்துக்கு ஒரு சில 'பேஸ் பேக்'குகளையும் போட வேண்டும்.

இதனால் சரும வறட்சி தடுக்கப்படுவதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் 'பளிச்'சென்று பிரகாசமாக ஆகும்.

இந்த விஷயத்தில், கற்றாழை வெகுவாக உதவும். கற்றாழையைக் கொண்டு அடிக்கடி பேஸ் பேக் போடும்போது சருமம் நீரேற்றத்துடனும், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கற்றாழையைப் பயன்படுத்தி பேஸ் பேக்குகள் தயாரிக்கும் விதம்...

பேஸ் பேக் 1:

இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1 ஸ்பூன் கிரீம் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

பேஸ் பேக் 2:

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் ½ ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக், சருமத் தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

பேஸ் பேக் 3:

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், சிறிது பாலில் ஊற வைத்த 4-5 குங்குமப்பூ இதழ்களுடன், ½ டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

பேஸ் பேக் 4:

இந்த பேஸ் பேக்குக்கு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக், சரும எரிச்சலைப் போக்கி, சருமத்துக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com