காந்தா- திரைவிமர்சனம்

பிரபல நடிகருக்கும்.. அவரை உருவாக்கிய இயக்குனருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும் கதை "காந்தா".
காந்தா- திரைவிமர்சனம்
Published on

பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் கதை நகருகிறது. அந்த காலத்தில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அவரை உருவாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் நாயகி பாக்யஸ்ரீயை சுற்றிதான் கதையின் முதல் பாதி அமைந்திருக்கிறது.

இயக்குநர் சமுத்திரகனி கனவு கதையாக உருவாக்கும் திரைப்படம் சாந்தா. சாதாரணமாக இருந்த துல்கர் சல்மானை நடிப்பின் சக்கரவார்த்தியாக காரணமான சமுத்திரகனியின் படத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்.

ஆனால், கதையின் கிளைமேக்ஸில் மாற்றம் வேண்டும் என்று துல்கர் சல்மான் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுகிறார். என் கதையை எப்படி நீ மாற்ற முயற்சிக்கலாம் என்று துல்கர் சல்மானுக்கும்- சமுத்திரகனிக்கும் இடையே ஈகோ பிரச்சனை எழுகிறது.

இந்த ஈகோ பிரச்சனைக்கு இடையே படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று சமுத்திரகனி நாயகனின் அடாவடியை பொறுத்துக் கொண்டாலும், தான் எழுதிய கிளைமேக்ஸூடன் படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே, துல்கர் சல்மான் மற்றும் நாயகி பாக்யஸ்ரீ இடையே புரிதல் ஏற்படுகிறது. பாக்யஸ்ரீயின் உதவியை சமுத்திரகனி நாடுகிறார்.

இந்த மோதல் இறுதியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது படத்தின் மீதிக்கதை

நடிகர்கள்

பழம்பரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்திருக்கும் துல்கர் சல்மான், நடிப்பில் பிச்சி உதறியிருக்கிறார். அவரது தோற்றம், பிரமிக்க வைக்கும் நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

பழம்பெரும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி வேறு ஒரு பரிணாமத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ-க்கு, அந்த காலத்து நடிகையின் முக அழகு. கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பு அதிரடியாக அமைந்துள்ளது.

இயக்கம்

பழம்பெரும் நடிகர் ஒருவரின் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கதையை எழுதியிருக்கிறார். அதை திரைக்கதையாக மாற்றி சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும், ஆங்காக்கே சில தொய்வுகள் இருந்தாலும் படம் ரசிக்கும்படியும், விறுவிறுப்பாகவும் செல்கிறது.

இசை

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கச்சிதம்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு அந்த காலத்திற்கே நம்பை பயணிக்க வைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com