சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் இன்றும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு.
பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்து வரும் இது, உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருவதால், நம் முன்னோர்களால் அமுதம் என்று போற்றப்பட்டது.
பழைய சோற்றில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவக்கூடியவை. குறிப்பாக, குடல் இயக்கங்களை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கக்கூடியவை.
பழைய சோற்றில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும், அரிதான வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்றவையும் இடம் பெற்றுள்ளன.
பழைய சோற்றில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன. இதில் வரும் புளிப்புச் சுவைக்கு காரணம் அதில் உள்ள லாக்டிக் பாக்டீரியா அமிலம் ஆகும்.
பழைய சோறு சாப்பிடும்போது, தயிர், உப்பு, சீரகம், சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது சுவையையும், சத்துக்களையும் அதிகரிக்கும்.