search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்பெயின் பிரதமர்"

    • ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டமிட்டார்.
    • விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    மாட்ரிட்:

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் (வயது 52) விரும்பினார்.

    அதன்படி ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் திட்டமிட்டார். இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார்.

    ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் அவர்கள் டோனானா தேசிய பூங்காவுக்கு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிரதமர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும்.
    • ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்குகின்றன.

    இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பாவின் உறுதியான ஆதரவை தெரிவிக்கவே வந்திருப்பதாக கூறினார்.

    ஸ்பெயின் பிரதமர் சுற்றுப்பயணத்தை தொடங்கிய சமயத்தில், போர் தீவிரமாக நடைபெறும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்னர்.

    இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    4 லியோபார்ட் டாங்கிகள், கவச வாகனங்கள், நடமாடும் மருத்துவமனை உட்பட உக்ரைனுக்கு அதிக அளவிலான கனரக ஆயுதங்களை ஸ்பெயின் வழங்கும். மேலும் புனரமைப்பு பணிகளுக்காக கூடுதலாக 55 மில்லியன் யூரோக்களை வழங்கும்.

    உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். மற்ற நாடுகளும் பிராந்தியங்களும் சமாதானத் திட்டங்களை முன்வைக்கின்றன. அவர்களின் அக்கறை பாராட்டத்தக்கது, ஆனால், அதே நேரத்தில், அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது ஆக்கிரமிப்பு போர். ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது. விதிகளை புறக்கணிப்பதை எந்த வகையிலும் ஆதரிக்கக்கூடாது. அதனால்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சமாதான திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மோடியுடனான உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக ஸ்பெயின் பிரதமர் கூறி உள்ளார்.
    • இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்

    புதுடெல்லி:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதுதொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்பெயின் பிரதமரை தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி. வளர்ந்து வரும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியாவின் ஜி20 தலைமையின் ஒரு பகுதியாக, எங்களது நெருக்கமான ஒத்துழைப்பை தொடருவோம், என மோடி குறிப்பிட்டுள்ளார்.

    மோடியுடனான உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக ஸ்பெயின் பிரதமர் கூறி உள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவிக்கு ஸ்பெயின் ஆதரவு அளிப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இருதரப்பு உறவுகளை, குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தகவல்.
    • அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

    மேட்ரிட்:

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயின் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

    ×