search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் விவகாரம்"

    தூத்துக்குடியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SterliteProtest #NGT

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தூத்துக்குடி மக்களிடைய கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு சார்பிலும் இதை எதிர்த்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    நேற்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், தருண் அகர்வால் குழு அறிக்கையில் கூறிய பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் அமல்படுத்த வேண்டும், ஆலையின் கழிவுகளை வெளியேற்ற மத்திய மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நெறிமுறைகள் உருவாக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பித்து 3 வாரங்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.

     


    மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் தொடரும் வகையில் மீண்டும் மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு தூத்துக்குடி மக்களிடையே கடும் அதிர்ச்சி மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டமான நிலை உருவாகி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், நகர மத்திய வியாபாரிகள் சங்கம், மாவட்ட நாட்டுபடகு கட்டுமர மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய அ.குமரெட்டியாபுரம், பண்டாரபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்கள்.

    இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    எதிர்ப்பாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டால் அதனை தடுத்து கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா, தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்கும் வருண் போன்ற கலவர தடுப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1800 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். தேவைப்பட்டால் வெளி மாவட்ட போலீசாரும் வர வழைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் தூத்துக்குடி நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் மற்றும் பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றிவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேறு பணிகளுக்கு சென்ற போலீசார் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். #SterliteProtest #NGT

    ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு வாதத்தின்போது ஸ்டெர்லைட்நிர்வாகம் தெரிவித்த கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். #SterliteIssue #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற அரசியல கட்சித் தலைவர்கள்
    தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகின்றனர் என்று கூறினார்.

    அதற்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘22 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருகிறேன். நான் தொடுத்த ரிட் மனு மீது 2010 ஆண்டு ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பளித்தாலும், நீதிபதிகள் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், பணியையும் அந்தத் தீர்ப்பில் பாராட்டினார்கள். சக்திவாய்ந்த பெரிய நிறுவனங்களை எதிர்த்துப் போராட ஒருசிலர்தான் வருவார்கள். அப்படி ஈடுபடுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டார்கள்’ என்று வைகோ கூறினார்.

    ‘2018 மே 22, இரத்தம் தோய்ந்த துக்க கரமான நாளாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்களும், மாணவ - மாணவிகளும் கலந்துகொண்டனர். காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து போராட்டத்தைத் தூண்ட எவரும் வரவில்லை. 

    தூத்துக்குடியிலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனவும் வைகோ கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தீர்ப்பாயம் முடிவுசெய்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் என்று நீதிபதி கோயல் கூறியதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய மனோநிலையை பிரதிபலிக்கும் நிலையை எண்ணிப் பயப்படுவார்கள். கேரளா, அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் நடுநிலை தவறாத நேர்மையாளர்கள். அவர்கள் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கூறி இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது; எங்கள் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் முடிவெடுக்கட்டும். ஆலை நிர்வாகம் சொல்லக்கூடாது என்று வைகோ கூறினார்.

    முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இரண்டு வாரத்திற்குள் குழு அமைக்கப்படும் என்றும், நான்கு வாரத்திற்குள் அந்தக் குழு தனது விசாரணை முடிவை தெரிவிக்கும் என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் கூறினார். 

    இந்த வழக்கில் வைகோவுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ஆனந்தசெல்வம் ஆகியோர் பங்கேற்றார்கள். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteIssue #Vaiko
    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #SterliteIssue
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக வாதம் நடைபெற்றது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தலைமை நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தார். இதனை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது.

    இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவசுப்பிரமணியம், சந்துரு ஆகியோரின் பெயர்களை தலைமை நீதிபதி கோயல் பரிந்துரை செய்தார். இவர்களில் யாரிடம் வழக்கை ஒப்படைக்கலாம் என்பது குறித்து வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சந்துரு இவ்வழக்கை விசாரிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவன வழக்கறிஞரின் கருத்தை கேட்டபிறகு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.



    முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 16, 17-ம் தேதியில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 3.5 லட்சம் டன் காப்பர் கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றங்கரை முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேசமயம், ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. இதனை ஏற்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அத்துடன், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தான் ஆலையை மூடினீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆலையை மூடும்போது உள்ள ஆதாரத்தையாவது தாக்கல் செய்யுங்கள் என்று வலியுறுத்தினர். அதற்கும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. கால அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, ஆதாரம் இல்லாமல்தான் ஆலையை மூடியிருப்பதாகத்தான் தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #SterliteIssue
    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை தமிழக அரசு துண்டித்தது. பின்னர் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியாகினர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட தமிழக அரசு முடிவு எடுத்து, அதற்கான அரசாணையை வெளியிட்டது.



    ஆனால், அரசாணை வலுவாக இல்லாததாலும், ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறியதாக போதிய ஆதாரங்களை அரசு சமர்ப்பிக்காததாலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.



    இந்த சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.  #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition

    ×