search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்கல சிலையை"

    • டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் படிப்பகம் (நூலகம்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர்முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    கள்ளிப்பட்டியில் வரும் 25-ந் தேதி மாலை கருணாநிதியின் 8 அடி உயர வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைக்க உள்ளார்.அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சிலையும் தயாராகி விட்ட நிலையில் இந்த சிலை அமைப்பதற்காக தனியாரிடம் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் 900 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் மாணவ-மாணவிகளின் அரசு போட்டி தேர்விற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வைக்கப்படும். ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் செய்யப்படும்.

    அதே போன்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி பெற்று தான் சிலை அமைக்கப்படுகிறது.அதே போன்று நூலகமும் உரிய அனுமதியோடும், வழிகாட்டு நெறிமுறைப்படி தான் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முதல்-அமைச்சர் விழா முடிந்த பின் அத்தாணி, அந்தியூர், பவானி வழியாக ஈரோடு செல்வதாகவும், அதைத்தொடர்ந்து 26-ந் தேதி காலை ஈரோட்டில் 70 ஆயிரம் பேருக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு முடிவுற்ற பணிகளையும் திறந்து வைக்க உளளார்.

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளில் குடியிருப்பவர்களை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் விற்பனையாகாமல் உள்ள வீடுகளில் குடியமர்த்துவது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

    அதே போன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஏதாவது மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தர முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் இதற்குள் அனைத்து நெல் கொள்முதல் மையங்களுக்கும் மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கும்.

    முதல்-அமைச்சர் ஒவ்வொரு மாதமும் துறைவாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதனடிப்படையில் விரைவில் விவசாயிகள் நலனுக்காக திட்டம் செயல்படுத்தப்படும்.

    நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் விற்பனையாகாமல் உள்ள வீடுகளின் மதிப்பு ரூ.12 லட்சம் வரை ஆகிறது. இந்த வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் பயனாளிகள் செலுத்தினால் மீதமுள்ள தொகையை அரசு செலுத்துகிறது.

    வேறு ஏதாவது திட்டத்தை இதனுடன் செயல்படுத்த முடியுமா என்பதை ஆலோசனை செய்து தான் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் தி.மு.க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×