search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதை நெல்லில் கலப்படம்"

    • விவசாயிகள் கலக்கம்
    • பொன்னி விதை நெல் 50 கிலோ மூட்டை ரூ. 1,700 க்கு விற்பனை

    கலசப்பாக்கம்:

    கலசப்பாக்கம் தாலுகாவில் தென்பள்ளிப்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையமும் ஆதமங்கலம்புதூரில் தொடக்க வேளாண் விரிவாக்க மையமும் செயல்பட்டு வருகிறது.

    இந்த வேளாண் விரிவாக்க மையங்களில் ஆடி18 க்காக (சம்பா பட்டமான) பொன்னி, பாபட்லா, கோ51, கோ53, கோ45, ஆகிய ரக விதை நெல்கள் விவசாயிகளின் தேவைக்காக கடந்த 25 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    இதில் பொன்னி விதை நெல் 50 கிலோ மூட்டை ரூபாய் ஆயிரத்து 700 க்கும், பாபட்லா 50 கிலோ மூட்டை ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதனை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் சுமார் 50 டன் எடைக்கு மேல் வாங்கிச் சென்று நெல்லை முளைக்க வைப்பதற்காக தண்ணீரில் ஊறவைத்து பக்குவப்படுத்தி விதை விதைப்பதற்காக மூட்டையை பிரித்து பார்த்த போது நெல்லில் அதிக அளவில் கலப்படம் இருந்ததை அறிந்து விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால் விதை நெல்லை நிலத்தில் விதைப்பதை நிறுத்தி வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க அலுவலருக்கு போன் மூலம் தகவல் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

    பின்பு வேளாண்துறை அதிகாரிகள் நேரில் சென்று நெல்லை பார்வையிட்டு ஏதோ தவறு நடந்து விட்டது அடுத்த முறை நல்ல நெல்லை இறக்குமதி செய்யலாம். மேலும் நெல்லை தண்ணீரில் ஊற வைத்து விட்ட காரணத்தினால் இந்த நெல்லை திருப்பி பெற்றுக் கொள்ள முடியாது. என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:-

    கலப்படமான பொன்னி விதை நெல்லை தற்போது சம்பா பட்டமான ஆடி 18-ந் தேதி விதைத்தால் ஆறு மாதம் கழித்து தை மாதம் அறுவடைக்கு வரும். அப்போது கலப்படமான நெல் இருந்தால் வியாபாரிகள் யாரும் நெல்லை கொள்முதல் செய்து கொள்ள மாட்டார்கள் அப்படியே செய்தாலும் அடிமாட்டு விலைக்கு தான் எடுப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் இந்த நெல்லை நாங்கள் எப்படி 6 மாதம் கஷ்டப்பட்டு கண்ணை போல் பாதுகாத்து வளர்த்து அறுவடை செய்த பின் விற்பனை செய்வது.

    குறைந்த செலவில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்த நேரத்தில் இப்படி கலப்படம் இருந்தால் எங்களின் எதிர்கால வாழ்க்கை என்னாவது 6 மாத கஷ்டத்தின் பலன் என்னாவது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×