search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"

    • செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவரது வீட்டின் அருகே உலக்காசி சாலையில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் இன்று காலை செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதைக்கண்டு பதறிப்போன அந்தப் பகுதி பொதுமக்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செல்வராஜ் உடலில் தலை தொங்கியபடி இருந்தது.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று செல்வராஜ் அவரது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மற்றொரு கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அடிதடி உண்டானது. இந்த தகராறு காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் செல்வராஜுக்கு வேறு ஏதாவது முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

    இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது கடைசி மகனான ராமு என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்துள்ளார். சொந்த வீடு இருக்கும் காரணத்தால் அதில் வரும் வாடகையை வைத்து எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த ராமுவை மது பாட்டில் மற்றும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜாம்பஜார் போலீசார் கொலை செய்யப்பட்ட ராமுவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமு என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சினையா? அல்லது முன்விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் மாயாண்டியையும், சிறுவனை கைது செய்தனர்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர்கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் பூதத்தான். இவரது மகன் பிரபு(வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

    கல்லிடைக்குறிச்சி புது அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(29). கூலி வேலை பார்க்கும் இவரும், பிரபுவும் நண்பர்கள். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் புதிதாக ஒருவர் கட்டிவரும் வீட்டில் வைத்து மது அருந்தினர். அப்போது மாயாண்டியின் உறவினர் மகன் உள்பட மேலும் 2 சிறுவர்களும் அவர்களுடன் இருந்துள்ளனர்.

    அப்போது மதுபோதையில் இருந்த பிரபுவை சிறுவர்களுடன் சேர்ந்து மாயாண்டி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்றனர். மேலும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதிஷ்குமார் அங்கு வந்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர்கள் பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபு கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பிரபுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அதனை கைவிடுமாறு அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரித்தும், அவர்கள் 2 பேரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மாயாண்டியிடம் தெரிவிக்கவே, அவர் பிரபுவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவரை மது குடிக்க அழைத்து சென்று அதிக அளவில் மது ஊற்றி கொடுத்து அவரை போதையடைய செய்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரபுவை தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாயாண்டியையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள எருமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (37). விவசாயியான இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

    முத்துராஜ் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் முத்துராஜை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்டையால் முத்துராஜை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் முத்துராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இது குறித்து மல்லூர் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கொலை செய்யப்பட்ட முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வாலிபர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்த வாலிபரின் தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் அவிநாசி பகுதியில் சுற்றி திரிந்து வந்ததுடன், பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் அவிநாசி பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிட செல்வது வழக்கம்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் இறந்து கிடந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர், நேற்று அந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்றதும், அப்போது அங்கு ஒரு பெண், 2 வாலிபர்கள் தட்டிக்கேட்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதும், பின்னர் 3பேரும் சேர்ந்து வாலிபரை அங்கிருந்து வெளியேற்றியதும் தெரியவந்தது. இந்த தகராறு காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    எனவே இந்த பிரச்சனையில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வாலிபர்கள் 2பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது28). பெண் தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு யுவராஜ் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன், தங்கராஜ், ராமச்சந்திரன், ராம மூர்த்தி, ஸ்ரீராமலு, சண்முகம், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இறந்து போன முருகன், சண்முகம் ஆகியோரை தவிர்த்து தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமலு, மணி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு சார்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.ஆர் லாசர் ஆஜரானார்.

    • திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

    பழனி:

    பழனி அடுத்துள்ள மானூர் ஆற்றுப்பாலத்தில் இன்று காலை ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி டி.எஸ்.பி சரவணன் தலைமையில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது பழனி மானூர் அண்ணாநகரை சேர்ந்த காளிமுத்து மகன் சிவா(23) என தெரியவந்தது.

    கூலிவேலை பார்த்து வந்த இவர் அவ்வப்போது இரவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார்.
    • வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ஏ.கே. மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். ஜமுனா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (60). கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

    சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார். இதே போல் வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    வாத்துகள் வெங்கடேசன் வளர்க்கும் கோழிகளை கொத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சிலம்பரசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை கோழி, வாத்துகள் சம்பந்தமாக மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் சிலம்பரசனும், வெங்கடேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சிலம்பரசன் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாத்து, கோழி தகராறில் நடந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
    • குடிப்பழகத்தை நிறுத்துமாறு தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் குடியிருந்து வருபவர் கணபதி. இவருக்கு கந்தசாமி என்ற சசிகுமார் (வயது 28), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

    அத்துடன் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். குடிப்பழகத்தை நிறுத்துமாறு அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை சசிகுமார் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணபதி எழுந்து வந்து பார்த்தபோது சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் குடும்ப பிரச்சனை காரணமாக உடன்பிறந்த சகோதரரே இந்த கொலையை செய்தாரா அல்லது மது அருந்தும் தகராறில் வேறு யாராவது மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீட்டில் வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லை வேளாண் துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கார்த்திக் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சி முத்துவுடன் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கும்பல் பணகுடி அருகே வைத்து மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு கார்த்திக்கை காரில் கடத்தி சென்றது.

    இந்நிலையில் நேற்று மதியம் ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் அவர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லையை அடுத்த பேட்டையை சேர்ந்த மதன்(23), கோபால சமுத்திரத்தை சேர்ந்த தளவாய்பாண்டி(23), மானூரை சேர்ந்த கார்த்திக் (31) ஆகியோர் சேர்ந்து அல்லல்காத்தான் என்ற கார்த்திக்கை காரில் கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    நெல்லை பேட்டையை அடுத்த மயிலப்புரத்தை சேர்ந்தவர் பிச்சைராஜ். அ.தி.மு.க. வட்ட செயலாளராக இருந்த இவர், அப்பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதில் தொடர்புடையவர்கள் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் பிச்சை ராஜை கொன்றவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்தால் தான் ஆத்திரம் தீரும் என்று அவரது மனைவி பொன்செல்வி புலம்பி வந்துள்ளார். இதைக்கண்ட பிச்சை ராஜின் அண்ணன் மகன் மதன், தங்கை மகன் கார்த்திக் ஆகியோர் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்கள் எப்படியாவது பிச்சை ராஜை கொலை செய்தவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை பார்ப்பதற்காக அவர்களது நண்பர் அல்லல்காத்தான் என்ற கார்த்திக் நாகர்கோவில் சென்றுள்ளதை மதனும், கார்த்திக்கும் அறிந்துள்ளனர்.

    இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திரும்பி வரும்போது அந்த நபரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு காரில் 2 பேரும் புறப்பட்டுள்ளனர். அப்போது மதன் தனது அக்காள் கணவரான கோபாலசமுத்திரத்தை சேர்ந்த தளவாய் பாண்டியையும் அழைத்துள்ளார். பின்னர் 3 பேரும் அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் பணகுடியில் வைத்து கடத்தி சென்றுள்ளனர்.

    இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் கார்த்திக்குடன் வந்த பேச்சிமுத்து தப்பியோடி பணகுடி போலீசில் நடந்த சம்பவங்களை கூறியதன்பேரில் போலீசார் நான்குவழிச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை நேற்று ஆய்வு செய்தபோது தான் அவர்களுக்கு ஏர்வாடி பகுதியில் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழத்திடியூரை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24).

    இவர் நேற்று இரவு 9 மணி அளவில் பணகுடியில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தெற்கு வள்ளியூர் 4 வழிச்சாலை அருகே உள்ள பிலாக்கொட்டை பாறை பகுதியில் வந்த போது எதிரே வந்த ஒரு கார் அவர் மீது மோதியது.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக தாக்கி, அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

    இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மட்டும் சாலையில் கிடந்தது.

    எனவே அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கார்த்திக்கை மர்ம கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தலைதுண்டிக்கப்பட்ட உடலை கைப்பற்றினர். அங்கிருந்து சற்று தொலைவில் துண்டிக்கப்பட்ட தலையும் கிடந்தது. அதனை வைத்து நடத்திய தொடர் விசாரணையில் அவர் நேற்று காரில் கடத்தி செல்லப்பட்ட கார்த்திக் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து, கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை பேட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார் உரிமையாளர் பிச்சைராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சியில் கார்த்திக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனேவே பிச்சை ராஜ் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×