search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிகள் இணைப்பு"

    பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் 3 வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #VijayaBank #DenaBank #BarodaBank #Merger
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கியமாக, பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பொதுத்துறை வங்கிகளான இந்த 3 வங்கிகளையும் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பரிசீலித்து வந்தது. ஆனால் இதற்கு வங்கி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தி வந்தது. எனினும் இந்த இணைப்புக்கு மத்திய மந்திரிசபை தற்போது ஒப்புதல் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் விஜயா மற்றும் தேனா வங்கிகளின் வர்த்தகம், சொத்துகள், உரிமைகள், உரிமங்கள், ஒப்புதல்கள் உள்ளிட்ட அனைத்தும் பரோடா வங்கியுடன் இணைக்கப்படும்.

    மேற்படி 2 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் புதிய வங்கியில் அதே பணிநிலையில் தொடர்வார்கள். அவர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் அனைத்தும் தொடர்ந்து அதே நிலையில் வழங்கப்படும். அவர்களின் நலன்கள் காக்கப்படுவதை பரோடா வங்கி உறுதி செய்யும்.



    இந்த இணைப்பு மூலம் பரோடா வங்கி நாட்டின் 2-வது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும். வருகிற நிதியாண்டு முதல் (ஏப்ரல் 1-ந் தேதி) இந்த 3 வங்கிகளும் இணைந்து ஒரே வங்கியாக செயல்படும் என மந்திரிசபையில் முடிவு எடுக்கப்பட்டது.

    இதைத்தவிர வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் இணைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வர்த்தகத்துறை கொண்டு வந்த இந்த பரிந்துரையை மந்திரிசபை ஏற்றுக்கொண்டு இருப்பதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் ரூ.600 கோடி வரை பலனடைய முடியும்.

    இதைப்போல குடும்ப நலத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்வஸ்தா நக்ரிக் அபியான், கருத்தடை சாதனம் வழங்குதல் உள்ளிட்ட 5 திட்டங்களை 2020-ம் ஆண்டு வரை தொடர்வது என மந்திரிசபை முடிவு செய்தது.

    மேலும் ‘பழங்குடியினர் திருத்த மசோதா 2018’-க்கும் மந்திரிசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த தகவல்களை மந்திரிசபை கூட்டத்துக்குப்பின் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  #VijayaBank #DenaBank #BarodaBank #Merger 
    3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது. #BankStrike #December26 #BankMerger
    ஐதராபாத்:

    தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளான மும்பையை மையமாக கொண்டு இயங்கும் தேனா வங்கி, பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதன்மூலம் உருவாக்கப்படும் புதிய வங்கி குஜராத்தை மையமாக கொண்டு இயங்குவதுடன், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றுக்கு பிறகு 3-வது பெரிய வங்கியாக இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக மேற்படி வங்கிகள் இணைப்புக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    அதன்படி வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் நேற்று அறிவித்து உள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த அமைப்பில் 9 தொழிற்சங்கங்கள் அங்கம் வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வெங்கடாச்சலம், இந்த தகவலை நேற்று வெளியிட்டார். மேற்படி வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசும், அந்த வங்கிகளும் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் இந்த வேலை நிறுத்த முடிவை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிகளின் 9 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதைப்போல மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தேசிய தொழிற்சங்க மாநாடு சார்பில் அடுத்த மாதம் (ஜனவரி) 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திலும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் பங்கேற்கும் எனவும் அவர் கூறினார்.  #BankStrike #December26 #BankMerger
    ×