search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்"

    மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி உள்ளது. இங்கு 125 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த 2012-13-ம்ஆண்டு தரம் உயர்த்துவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு பணமும் கட்டப்பட்டது. ஆனால் அப்பள்ளி இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. இந்தாண்டு 2018-19ம் கல்வியாண்டிலாவது தரம் உயர்த்தப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான அரசாணையில் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுவாவில் 2 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டது.

    இதனால் மணப்பாறை பகுதியில் தரம் உயர்த்தப்படாத பள்ளிகளை தரம் உயர்த்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பண்ணப்பட்டி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை தரம் உயர்த்தப்படாததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் புத்தாநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தி.முக. மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். பெற்றோர்கள் மற்றும் கிராமமக்கள் கல்வி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்று போலீசார் தெரிவித்தும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

    ×