search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தானில் தேர்தல்"

    ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. #congress #Rajasthanelection

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடைபெறுவதால் இது, மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி இருக்கிறது. அதே போல் அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

    ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. அங்கு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.

    அந்த மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றிலும், உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.


    எனவே, காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் எல்லா மாநிலத்திலும் நிலவுவது போலவே ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் கடுமையான கோஷ்டி பூசல் நிலவுகிறது.

    சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால யார் முதல்-மந்திரி என்பதில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப் படவில்லை.

    முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் சில தலைவர்கள் முதல்-மந்திரி பதவி போட்டியில் உள்ளனர்.

    அங்கு பாரதிய ஜனதாவில் வசுந்தரராஜேவை மீண்டும் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சியிலும் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்துள்ளது.

    ஆனால், முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன் கூட்டி அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினேஷ் பாண்டே கூறும்போது, கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க மாட்டோம்.

    ராகுல் காந்தி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணிகளை கூட்டாக செய்வோம். முதல்-மந்திரி யார்? என்பது தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறினார். #congress #Rajasthanelection

    ×