search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த் திட்டம்"

    பாராளுமன்றம் மற்றும் தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கூறி அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சுமார் 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முற்றுப்புள்ளி வைத்தார்.

    தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன்பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.

    தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்தினார்.

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்காத ரஜினி தனது பேட்டிகளில் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி தொடங்கி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல்கள் எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்வதில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார் என்கிறார்கள். ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பியவர் தினமும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்றத்தின் தலைமை நிர்வாகிகள், அரசியல், திரைத்துறையை சேர்ந்த தனக்கு நெருக்கமான நண்பர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

    அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் 2 நாட்களுக்கு முன்பு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய விவாதம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீண்டுள்ளது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

    ‘ரஜினி இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகள் சொல்வதைவிட களநிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். ரஜினிகாந்தின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுகர்களின் வருகை அதிகரித்தபடியே இருக்கிறது.

    ‘தர்பார்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29-ந்தேதி தொடங்க இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை விட தமிழக அரசை தீர்மானிக்கக் கூடிய 22 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளும் மே 23 அன்று வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் எப்படியிருக்கும்?

    உடனடியாகவோ சில மாதங்களிலோ சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் ரஜினி. இதற்காக கடந்த சில நாள்களாக அரசியல் பிரமுகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார்.

    சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும்போது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான சூழல்களைப் பற்றித்தான் நண்பர்களுடனான சந்திப்பில் விவாதிக்கிறார்.

    அதிலும், தமிழக அரசியலில் அவர் தீவிர ஆர்வம் காட்டுவதால், அரசியல் சூழ்நிலைகள் எப்படியிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

    நேற்று நடந்த விவாதத்தில், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் மத்தியிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்? மற்ற மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும், மக்கள் மனநிலை எப்படியிருக்கிறது, தேர்தல் முடிவுகள் எதை நோக்கிப் போகும்’ என ஏராளமான கேள்விகளைக் கேட்டார்.

    ‘இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோற்பார்கள், கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது, உண்மையான நிலவரம் எப்படியிருக்கிறது?’ என விசாரித்தார். இதில், தனக்குக் கிடைத்த தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.

    இந்தச் சந்திப்புகளில், ‘என்ன செய்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும், இதை மட்டும் செயல்படுத்தி விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்’ என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

    ‘தர்பார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அதற்குள் அரசியல் கட்சிக்கான பணிகளுக்கு வடிவம் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்.

    தமிழக சட்டமன்றத்தில் சூழல்கள் மாறிவிட்டால், அடுத்தகட்ட அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். ‘போர் வரும்போது வருவேன்’ என அவர் கூறியதை விரைவில் சாத்தியப்படுத்துவார்.

    மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×