search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் கூட்டமைப்பு"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஜீவாநகரில் உள்ள அன்னை தெரசா மக்கள் மன்றத்தில் நேற்று நெல்லைதூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், ஊத்தக்குழி, உவரி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர், வீரபாண்டியன்பட்டினம், சிங்கித்துறை, கொம்புத்துறை, புன்னக்காயல் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    தூத்துக்குடி திரேஸ் புரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அத்துமீறி நுழைந்து ஜான்சி என்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததை கொலை வழக்காக பதிவு செய்து, உடனே அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு கடற்கரை பகுதியில் அரசு முயற்சி செய்து வரும் சாஹர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது. இதையும் மீறி அந்த ஆலையை திறந்தால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    துப்பாக்கி சூட்டின் போது படுகாயம் அடைந்த மக்களுக்கு தலா ரூ.50 லட்சமும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியும் கொடுக்க வேண்டும். அதேபோல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய அனைத்து போலீசார் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பணியில் உள்ள நீதிபதியை கொண்டு நீதி விசாராணை நடத்தப்பட வேண்டும்.

    கடற்கரை கிராமங்களில் கதிரியக்கத்தை அளவீடு செய்யும் கருவியை அரசாங்கம் நிறுவ வேண்டும். தடை செய்யப்பட்ட போக்குவரத்து சேவையை அனைத்து ஊர்களுக்கும் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

    கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடத்தில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது என மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    தூத்துக்குடி, மே. 27-

    தூத்துக்குடி மாவட்ட அனைத்து பரதர் மீனவர் கூட்டமைப்பு கூட்டம் தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் ஆலய வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அமைதியாக போராடிய அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், துப்பாக்கி சூட்டையும் வன்மையாக கண்டிக்கிறோம். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மற்றும் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.கடந்த 22-ந் தேதி நடந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கலவரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நஷ்டஈடும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு பணியும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும், மேல் சிகிச்சையும் அரசு சார்பில் வழங்க வேண்டும்.

    தூத்துக்குடி மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும். தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, வீடு புகுந்து அத்துமீறி அப்பாவி இளைஞர்களை போலீசார் கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்’ என்றார். *** தூத்துக்குடி, மே. 27-

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.

    கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். * * * ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பாதிரியார் லியோ ஜெயசீலன்.

    ×