search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும்"

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டவர் வெங்கடேசன்.

    சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை பாராளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாம், மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளுக்குள் பெண் தாசில்தார் சம்பூரணம் உள்பட 4 அதிகாரி கள் சட்டவிரோதமாக கடந்த 20-ந் தேதி சென்று சில ஆவணங்களை நகல் எடுத்துள்ளனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை உடனடியாக மாற்ற வேண்டும். ஓட்டுகள் எண்ணும் மையத்துக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கவும், தாசில்தார் மையத்துக்குள் சென்றது குறித்து முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாக அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் நிரஞ்சன் ராஜகோபால், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அவற்றின் விவரம் பின்வருமாறு:-

    மூத்த வக்கீல்:- தாசில்தார் உள்பட 3 பேரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழையவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. இருந்தாலும், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் அவர்கள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றது தேர்தல் ஆணைய விதிகளை மீறிய செயலாகும். தாசில்தார் யாருடைய உத்தரவின் அடிப்படையில் அங்கு சென்றார்? என்பது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட வேண்டும்.

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- மாவட்ட கலெக்டரின் உதவியாளரான, உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில்தான் தாசில்தார் சம்பூரணம் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வந்து நகல் எடுத்துள்ளார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணப்பட உள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என்பது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்களில் முடிவு எடுக்க உள்ளது.

    நீதிபதிகள்:- கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அளித்த விசாரணை அறிக்கையில், தாசில்தார் சம்பூரணத்துடன் சென்றவர்களின் விவரங்கள் இல்லை. அவர்களிடம் விசாரணை நடத்தியதற்கான விவரங்களும் இல்லை. மாவட்ட கலெக்டரின் உதவியாளர் குறித்த விவரங்கள் அதில் இல்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    நீதிபதிகள்:- அப்படி என்றால், இந்த சம்பவத்துக்கு யாரெல்லாம் பொறுப்பு? கலெக்டரின் உதவியாளர் சொன்னதால் தாசில்தார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தேர்தல் விதிகளின்படி மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் தினமும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று பார்வையிட வேண்டும். அவ்வாறு மதுரை கலெக்டர் பார்வையிட்டாரா?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இதன் மீது முடிவு எடுக்க 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும்.

    நீதிபதிகள்:- எந்த விவரங்களும் அறிக்கையில் இல்லாத நிலையில், எதை வைத்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கப்போகிறது? எப்போதும் நேர்மையான நியாயமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறீர்கள். அதன்படிதானே இந்த விவகாரத்திலும் செயல்பட்டு இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உதவியாளர் தானே தாசில்தார் உள்ளிட்டோரை அனுப்பி வைத்துள்ளார்? யாருடைய அறிவுறுத்தலின்படி, அவர்களை கலெக்டரின் உதவியாளர் அனுப்பிவைத்தார்? என்பது குறித்து அவரிடம் விசாரித்ததாக அறிக்கையில் எந்த விவரமும் இல்லையே? ஆவணங்களின் நகல் எதற்காக எடுக்கப்பட்டது? அவர்களது திட்டம் என்ன?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- தமிழகத்தில் மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள அனைத்து மையங்களுக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நீதிபதிகள்:- வாக்கு எண்ணும் மையத்துக்குள் யார் வேண்டுமானாலும் செல்ல முடிகிறது என்றால் அங்கு பாதுகாப்பே இல்லை என்றுதானே அர்த்தம்? மதுரை மையத்திற்குள் தாசில்தாருடன் சென்றவர்களை யார்? என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கேட்கவில்லை. அவர்கள் வருகிறார்கள், மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உத்தரவிட்டது யார்? அந்த மையத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய உதவி போலீஸ் கமிஷனர் அப்போது பாதுகாப்பு பணியில் ஏன் இல்லை? பாதுகாப்பு பணிக்கு ‘வாட்ச்மேனை’ நியமித்து விட்டு அவர் தூங்கி விட்டார் என்று சொல்லலாமா?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இதில் பங்கு எதுவும் இல்லை.

    நீதிபதிகள்:- அப்படி என்றால், தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையமும் வெவ்வேறா? தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டருக்கு உத்தரவிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் உத்தரவிட வில்லை?

    தேர்தல் ஆணையம் வக்கீல்:- மாநில தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து விவரங்களை பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அவரது பணி என்பது ஒரு ‘போஸ்ட் மேன்’ (தபால்காரர்) மாதிரிதான். யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவரால் முடியாது. தேர்தல் நடத்தும் மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர் பணியை தான் அவர் செய்ய முடியும்.

    நீதிபதிகள்:- போஸ்ட்மேன் போல் மட்டுமே செயல் படக்கூடிய அதிகாரம் படைத்த ஒரு அதிகாரியால் எப்படி தேர்தலை நேர்மையாக நடத்த முடியும்? தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நொடி முதல், அரசு எந்திரம் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி கட்டுப்பாட்டிற்கு வந்து விடுகிறது. அப்படி இருக்கும்போது, அவருக்கு அதிகாரம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? ஒரு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உள்ள அதிகாரம் கூட மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா? தொகுதி தேர்தல் அதிகாரிகள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் தலைமை தேர்தல் அதிகாரி இருந்துவிடுவாரா?

    கண்ணுக்குமுன் ஆதாரங் கள் இருக்கும்போது ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதன்பின்னர் நீதிபதிகள் நேற்றிரவு 7 மணியளவில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட இருந்தோம்.

    ஆனால், இந்த அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், கலெக்டர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார். மேலும், மதுரை கலெக்டர் நடராஜனை அப்பதவியில் இருந்து மாற்றி விட்டு, அதற்கு பதில் எஸ்.நாகராஜனை கலெக்டராக நியமித்துள்ளதாகவும், அதேபோல, புதிய உதவி தேர்தல் அதிகாரியாக சாந்தகுமார் என்பவரை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதை பதிவு செய்துகொள்கிறோம். அதே நேரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை முன்னாள் மாவட்ட கலெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். 
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும்.

    உதவி காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #HighCourt #EC #MaduraiConstituency
    ×