search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி தோழிகள்"

    பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்பாக மாணவியின் தோழிகள் 4 பேரிடம் விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா முடிவு செய்துள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    பாலியல் தொல்லைக்கு விடுதி வார்டன்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றச்சாட்டினார். பேராசிரியைகள் பேசியதாக ஆடியோவையும் மாணவி வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த பாலியல் புகார் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.



    இந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் தரப்பில் இருந்து தனக்கு பணம் கொடுப்பதாகவும், வழக்கை திரும்ப பெறுமாறும் மிரட்டல் வருவதாக மாணவி புதிய புகார் கூறினார்.

    போலீசாரின் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது. என் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்படுவதால் கோர்ட்டு உதவியை நாடலாம் என்ற முடிவில் உள்ளேன் என்றார்.

    மாணவியிடம் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள் பேசிய ஆடியோ சி.டி.க்களை போலீசார் கேட்டுள்ளனர். அதனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் மாணவி ஒப்படைக்க இருக்கிறார்.

    இதற்கிடையே, பாலியல் புகார் தொடர்பாக மாணவியின் தோழிகள் 4 பேரிடம் விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா முடிவு செய்துள்ளார். தோழிகளை விசாரணைக்கு அழைத்தும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

    விசாரணையில் தோழிகள் கூறுவதை வைத்து புகாரின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திய பிறகு உதவி பேராசிரியர், பேராசிரியைகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வது அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், கல்லூரியில் இன்று நடந்த தேர்வை மாணவி போலீஸ் பாதுகாப்புடன் வந்து எழுதினார். கம்யூனிஸ்டு கட்சியினரும் மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்கினர்.

    இதுபற்றி, வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    பேராசிரியைகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சக மாணவ-மாணவிகள் மீண்டும் போராட்டம் நடத்த என்னிடம் அனுமதி கேட்டு உள்ளனர்.

    இன்று தேர்வு நடந்ததால் மதியத்திற்கு மேல் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளேன் என்றார். பாலியல் புகாரில் தங்கள் மீதான நியாயத்தை வெளிப்படுத்தாமல் மாணவிக்கு எதிராக சக மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  #ChennaiStudentharassment #AgriCollege
    ×