search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை அடித்துக்கொன்ற வாலிபர்"

    வள்ளியூரில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது30). நரிக்குறவரான இவர் ஊர் ஊராக சென்று பாசி விற்று வந்தார். இவரது மனைவி கவுசல்யா (20). இவரும் கணவருடன் சேர்ந்து பாசி விற்க செல்வது வழக்கம்.

    இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நேற்றிரவு முத்துராஜும், கவுசல்யாவும் நாகர்கோவில் சென்றனர். அங்கு ஒரு சினிமா தியேட்டரில் அவர்கள் படம் பார்த்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.

    பலத்த காயம் அடைந்த கவுசல்யா மயங்கி விழுந்தார். உடனே கவுசல்யாவை, முத்துராஜ் ஒரு ஆட்டோவில் ஏற்றி குறவர் காலனிக்கு வந்தார். அங்கு வீட்டில் அவரை இறக்கி போட்டு விட்டு படுத்து தூங்கி விட்டார். இதனிடையே மயக்க நிலையில் இருந்த கவுசல்யா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலை முத்துராஜ் எழுந்து பார்த்த போது கவுசல்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முத்துராஜ், கவுசல்யாவின் உடலை அங்கிருந்து வெளியில் கொண்டு செல்ல திட்ட மிட்டார்.

    இதற்காக ஒரு வாகனத்தை வரவழைத்து அதில் கவுசல்யாவின் உடலை ஏற்றினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் முத்துராஜிடம் கேட்டபோது, அவர் மழுப்பலான பதில்களை கூறியுள்ளார்.

    சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே முத்துராஜ் அங்கிருந்து தப்ப முயன்றார். பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்பு அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்கள் கட்டி வைத்ததில் காயம் அடைந்த முத்துராஜை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து கவுசல்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலையாளியை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்துராஜிடம் விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக கவுசல்யாவை அவர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×