search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் அள்ள அனுமதி"

    சனவெளி கோட்டைக்கரை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

    இதில் பாம்பனை சேர்ந்த மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச்சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் மீனவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்ல கடந்த சில ஆண்டுகளாக நாட்டுப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த ஆலயம் நாட்டுப்படகு மீனவர்களால் நேர்ச்சையாக கட்டப்பட்ட காலம் முதல் குடும்பம் குடும்பமாக நாட்டுப்படகு மீனவர்கள் தான் சென்று வழிபட்டு வந்தனர். தற்போது விசைப்படகுகள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்படும் நிலையில் நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் சென்று வழிபட உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சனவெளி ஏ.ஐ.டி.யு.சி. மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முருகபூபதி, குருசாமி ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவெளி கோட்டைக்கரை ஆற்றுப்படுகையில் கடந்த 15 ஆண்டுகளாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி 170-க்கும் மேற்பட்டோர் பிழைத்து வருகின்றனர். இவர்கள் முறையாக அரசின் அனுமதி பெற்று ரசீது பெற்று மணல் அள்ளி வந்தனர்.

    இந்த நிலையில் மணல் அள்ளுவதற்கு 50 நாட்கள் அனுமதி உள்ளதற்கு முன்பாகவே மாட்டு வண்டிகளுக்கு அங்குள்ள அதிகாரி சீட்டு கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதுகுறித்து காரணம் கேட்டதற்கு சீட்டு இல்லை எனக்கூறி காலதாமதப்படுத்தி வருகிறார். இவ்வாறு 40 நாட்கள் கடந்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தண்ணீர் ஊற்று, புதூர், சீதாகுண்டம், வேர்க்காடு, பேய்க்கரும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மீனவ தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்கரையில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இந்த துறைமுகத்தில் அரியாங்குண்டு, பிள்ளைகுளம், வடகாடு, மாந்தோப்பு போன்ற கிராம மக்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த கடற்கரை ஆழம் குறைவாக உள்ளதுடன், குறுகிய நிலப்பரப்பையும் கொண்டது. இந்த நிலையில் இப்பகுதியில் சிலர் பொழுதுபோக்கு மையம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இங்கு சுற்றுலா தளம் அமையும்பட்சத்தில் இப்பகுதியில் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே இங்கு தனியார் சுற்றுலா மையம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர் யூனியன் தாளியரேந்தல் கிராம மக்கள் சார்பில் அளித்த மனுவில், தாளியரேந்தல் கிராமத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதுகுறித்து யூனியன் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரத்தை அடுத்துள்ள காருகுடி கிராம மக்கள் சார்பில் நாகராஜன், தர்மராஜ் ஆகியோர் அளித்த மனுவில், காருகுடி கிராமத்தில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் அதில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. மேலும் மின் கம்பங்களில் தெருவிளக்குகளும் இல்லாமல் உள்ளது.

    இதேபோல சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் காருகுடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. சில நாட்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு பஸ் மட்டும் வந்து செல்கிறது. இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பெரியபட்டினம் அருகே உள்ள குருத்தமண்குண்டு பகுதியை சேர்ந்த எஸ்தர் என்பவர் அளித்த மனுவில் பெரியபட்டணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியை தராமல் நாளொன்றுக்கு ரூ.100 தருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு உரிய கூலி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி முருகன் தலைமையில் 13 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 378 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், திருமானூர் கொள்ளிடம் கரையோரம் உள்ள சுள்ளங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு மாட்டு வண்டி மூலம் கொள்ளிட கரையோரம் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்தோம். ஆனால் தற்போது மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் தங்களுக்கு மணல் அள்ளுவதற்கு அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்து மணல் அள்ள அனுமதி அளித்து குடும்பத்தை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு கொடுத்தார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு கொடுத்தார். அப்போது இது குறித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அன்பழகன் பதில் கூறினார்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 232 மனுக்கள் வரப்பெற்றன. மனுவை பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனு தாரருக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டார்.


    கைக்குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஸ்ரீமதி உள்பட அவரது குடும்பத்தினரை படத்தில் காணலாம்.



    இதில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றின் மூலம் பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது விவசாயம் பொய்த்து போனதாலும், முறையாக காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்படுவதாலும் அவர்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கால்நடைகளை பராமரிக்க கூட வழியில்லாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். எனவே கரூர் மாவட்ட மக்களின் கட்டுமான பணிகளுக்காக காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் எடுத்து கொடுத்து பிழைப்பு நடத்தும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா பொய்யாமணியை சேர்ந்த வைரபெருமாள், சுக்கம்பட்டி சுப்ரமணி, நச்சலூர் ராஜா, சின்னபணையூர் பாலசுப்ரமணியம் மற்றும் ஜீயபுரத்தை சேர்ந்த ரவி உள்ளிட்ட நெல்கொள்முதல் வியாபாரிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், நாங்கள் குளித்தலை பகுதியை சேர்ந்த 600 விவசாயிகளிடம் 29,249 மூட்டை நெல் கொள்முதல் செய்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த சின்னகண்ணு(வயது 38) மற்றும் அவரது மனைவி கவுசல்யா ஆகியோரது நிறுவனத்திற்கு விற்பனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்தோம். அதற்குரிய பணம் ரூ.3½ கோடியை 15 நாட்களில் தந்து விடுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை ரூ.61 லட்சத்து 54 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி ரூ.2 கோடியே 89 லட்சத்தை தர மறுத்து இழுத்தடித்தனர். இந்த நிலையில் பணத்தை எப்போது திருப்பி தருவீர்கள் என சின்னகண்ணு, கவுசல்யாவிடம் கேட்டபோது உரிய பதில் இல்லை. எனவே பணமோசடியில் ஈடுபட்ட இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் அருகே வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி ஸ்ரீமதி(23) தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், எனது கணவர் சிவக்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் லாரிக்கு படுதா கட்டும் வேலைக்காக சென்றார். அப்போது அங்கு லாரியில் மணல் ஏற்றி கொண்டு கடத்தியது தெரிய வந்தது. பொக்லைன் மூலம் மணலை அள்ளி லாரியில் போட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் மோதியதில் எனது கணவர் சிவக்குமார் படுகாயமடைந்தார். அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். எனவே அவருக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். மேலும் மணல் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    குளித்தலை வட்டம் வீரம்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி தெருக்களில் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அருகே கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அளவில் இடவசதி இல்லாததால் நோயாளிகளில் சிரமப்படுகின்றனர். எனவே நவீன வசதிகளுடன் இந்த சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் லாலாப்பேட்டை நாகராஜன் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்து மக்கள் கட்சியின் கரூர் நகர தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை முதல் சுங்ககேட் வரையும், சில பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகள் வைத்து போக்குவரத்திற்கு சிலர் இடையூறாக வியாபாரம்செய்கின்றனர். எனவே இது பற்றி உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரூர் நகராட்சியிலுள்ள அரசு டாஸ்மாக் கடை பாரில் கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அரசு காலனி பகுதியில் சாக்கடை வடிகாலை சிலர் அடைத்து வைத்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.

    இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மனு அளித்த 3 பயனாளிகளுக்கு அம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 1 பயனாளிக்கு பிரெய்லி கைக்கடிகாரம், 2 பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×