search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி பெண் மந்திரவாதி"

    • தான் ஒரு மந்திரவாதி எனவும் முருகனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை பரிகாரம் மூலம் சரிசெய்து விடலாம் எனவும் சத்தியவதி கூறினார்.
    • லட்சுமி தனது கணவருக்கு தெரியாமல் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். பூஜையின்போது பணம் மற்றும் நகைகளை வைக்கும்படி கூறியதால் லட்சுமி அதன்படி செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). எலக்ட்ரீசியன் இவரது மனைவி லட்சுமி (வயது 35). வீட்டில் தையல் எந்திரம் வைத்து துணி தைத்து கொடுத்து வருகிறார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் 7-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

    லட்சுமியின் வீட்டில் அவரது மாமனார் துரைராஜன், மாமியார் உதயகுமாரி ஆகியோரும் வசித்து வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு லட்சுமியின் வீட்டுக்கு சத்தியவதி (26) என்ற பெண் வாடகைக்கு குடித்தனம் வந்தார். தான் ஒரு தனியார் கம்பெனியில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருவதாக கூறினார். தனது கணவர் திண்டிவனத்தில் ஒரு மார்க்கெட்டில் பணியாற்றி வருவதாக சத்தியவதி கூறினார். அவரது தோற்றத்தை கவனித்த லட்சுமி அவருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்தார். சத்தியவதியும் லட்சுமியிடம் அன்பாக பேசி வந்தார்.

    இந்த நிலையில் லட்சுமியின் கணவர் முருகனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அறிந்த சத்தியவதி தான் ஒரு மந்திரவாதி எனவும் முருகனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை பரிகாரம் மூலம் சரிசெய்து விடலாம் என கூறினார். இதனை நம்பிய லட்சுமி பரிகார பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார்.

    மேலும் லட்சுமியை காஞ்சிபுரத்துக்கு அழைத்து சென்றும் பூஜை செய்தார். அதன் பின்னர் வீட்டிலே பூஜை செய்யலாம் என கூறினார். அதன்படி லட்சுமி தனது கணவருக்கு தெரியாமல் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். பூஜையின்போது பணம் மற்றும் நகைகளை வைக்கும்படி கூறியதால் லட்சுமி அதன்படி செய்தார்.

    பல்வேறு நாட்கள் பூஜை செய்தும் முருகனின் உடல்நிலை சீராகவில்லை. இந்த நிலையில் முருகனுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை எடுத்தபோது வயிற்று வலி தானாக சரியாகிவிட்டது. இதனை அறிந்த சத்தியவதி தான் செய்த பரிகார பூஜையால் தான் உங்கள் கணவருக்கு வயிற்றுவலி சரியாகிவிட்டதாக கூறி தனது பரிகார பூஜையின் மகிமையை எடுத்து கூறினார்.

    மேலும் இந்த பூஜை குறித்து வெளியில் யாரிடமும் சொன்னால் உங்கள் குழந்தைகள் ரத்தம் கக்கி இறந்து விடுவார்கள் என மிரட்டினார். இதனால் பயந்துபோன லட்சுமி இதனை யாரிடமும் சொல்லவில்லை.

    இந்த நிலையில் லட்சுமியின் மாமனார் துரைராஜனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து துரைராஜனின் மனைவி உதயகுமாரி சத்தியவதியிடம் சென்று தனது கணவர் குணமடைய பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றார். அதன்படி சத்தியவதியும் பூஜை செய்தார்.

    இந்த நிலையில் துரைராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் தான் சிக்கிவிடுவோமோ என பயந்து போன சத்தியவதி வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவானார். அதன் பிறகு தான் லட்சுமி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதற்கிடையே துரைராஜனின் துக்க நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் சிலர் லட்சுமியிடம் விசாரித்தபோது தன்னை சத்தியவதி ஏமாற்றிவிட்டதாக கூறினார். பரிகார பூஜை செய்வதாக கூறி 37 பவுன் நகைகள் மற்றும் 12 லட்சம் பணத்தை கணவருக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்ததாக கூறினார்.

    இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியவதியை கைது செய்தனர். போலி மந்திரவாதியிடம் தனது நகை பணத்தை இழந்த சம்பவம் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×